கொரோனா குறித்த அரசாணைகளை.. அரசு இணையதளத்தில் வெளியிடணும்.. தமிழக அரசுக்கு, ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகளையும் அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

'ஸ்டாப் கொரோனா' இணையதளம்
தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகளை வெளியிடுவதற்காக தமிழக அரசு இணையதளம் உள்ளது. கொரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட 'ஸ்டாப் கொரோனா' என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை.

அரசாணைகள் வெளியிடவில்லை
2021-ம் ஆண்டு துவங்கியது முதல் மே 12-ம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும், இதுவரை ஐந்து அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

உத்தரவிடுங்கள்
கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. அதனால் கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

பதிவேற்றம் செய்யப்படுகிறதா?
இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இன்று காலை விசாரித்தது. அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து பிற்பகலில் தலைமை நீதிபதி அமர்வில் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

தமிழக அரசுக்கு உத்தரவு
பிற்பகல் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 18ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு கொண்ட நீதிபதிகள், கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசின் இணையதளங்களிலும், 'ஸ்டாப் கொரோனா' இணையதளத்திலும் தமிழக அரசு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர் . பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications