கழுவேலி ஈர நிலம்: நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் தரப்பின் விளக்கத்தைக் கேட்டு 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநிலம், கடற்கரை சதுப்பு நில ஏரியாகும். வங்காள விரிகுடாவின் அருகில் ஏறக்குறைய புதுச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஏரி அமைந்துள்ளது.இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த சதுப்பு நில ஏரி, வலசை வரும் பறவைகளுக்கு உணவு தரும் இடமாக உள்ளது
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 'கழுவேலி ஈரநிலத்தை' தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டது. சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் திமுக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மம்முட்டி குடும்பத்தினரின் நிலம்
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை, கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

அரசு உத்தரவு ரத்து
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நிலத்தை மறுவகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நடிகர் மம்முட்டி தரப்பில் வாதிடப்பட்டது.இதையேற்ற நீதிபதி, அந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவு
அதேசமயம், இந்த விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மம்முட்டி தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications