குற்ற வழக்குகளில் சாட்சிகள் சொல்ல பொதுமக்கள் முன் வருவதில்லை! உயர்நீதிமன்றம் வேதனை!
சென்னை: குற்ற வழக்குகளில் சாட்சிகள் சொல்ல பொதுமக்கள் முன் வருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளின் புலன் விசாரணையின் போது பொதுநலனில் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன் வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விவரம் வருமாறு;
வக்பு வாரியத் தலைவர் மீதான புகார்! முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்க! உயர்நீதிமன்றம் உத்தரவு
துணை நடிகை
கடந்த 2006ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் துணை நடிகையாக இருந்த 16 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகிய 4 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
4 பேர் தரப்பு
அப்போது, கைது மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பின் இருப்பு சாட்சி என்றும் அவரது சாட்சியத்தை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
சாட்சிகள் வருவதில்லை
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது என்றும் பொதுநலனில் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன் வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையில் இருப்பு சாட்சி என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
3 ஆண்டுகள்
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலை மறைவு குற்றவாளியான சரவணன் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார் என்பதும் மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காக சரவணனுக்கு இரையாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி , நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை மூன்று ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.