நான்கரை மாதத்திற்கு பின்.. திறக்கப்பட்ட கோயம்பேடு தானிய மார்க்கெட்! காய்கறி சேல்ஸ் எப்போது தெரியுமா?
சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
சென்னை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி, கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்து, கொரோனா தொற்று பரவியதால் மே 5ஆம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. திருமழிசையில் காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. படு சிரமத்திற்கு இடையே வியாபாரிகள் திருமழிசைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேல் கொரோனா பரவல் இருந்தாலும் நான்கரை லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 27ஆம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி திறக்கப்படும் என்றும் கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார்.
ஆஹா, ஓஹோன்னு பேசப்பட்ட.. ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு.. 7ல் ஒருவருக்கு பாதிப்பு
இதனையடுத்து கடந்த மே மாதம் 5ஆம் தேதி மூடப்பட்ட உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உணவு தானிய மார்க்கெட்டில் உள்ள 290 கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. சந்தையின் வாயில் கதவுகள் திறக்கப்பட்ட போது விவசாயிகளும், வியாபாரிகளும் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி, கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.