அலட்சியம்.. துடிதுடித்து இறந்த பெண் ஐடி ஊழியர்! விதிமீறல் நடந்துள்ளதாக சென்னை மேயர் பிரியா விளக்கம்
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கட்டிடத்தை இடிப்பதற்கான மாநகராட்சி விதிகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து உள்ளார். இந்த விபத்து தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் விளக்கமளித்து இருக்கிறார்.
சென்னை அண்ணா சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் ஆயிரம் விளக்கு மசூதி அருகே பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த பழைய கட்டிடத்தை புல்டோசர் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது.
அந்த பணியின்போது கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து அண்ணா சாலை ஓரமாக விழுந்தது. இதனால் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்கள். இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

பெண் உயிரிழப்பு
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கி இருந்த 2 பெண்களை மீட்டனர். 20 நிமிட போராட்டத்துக்கு பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.

ஐடி ஊழியர் பிரியா
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கட்டிட சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த பெண் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரியா என்பது தெரியவந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்து இருக்கிறார்.

இருவர் கைது
உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் கட்டிடத்தை இடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஜேசிபி ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து ராமநாதபுரத்தை சேர்ந்த ஞானசேகர், கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பணிகள் நிறுத்தம்
கட்டிடத்தை இடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யாமலும் முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்த கட்டிடத்தை இடித்ததால் விபத்து ஏற்பட்ட நிலையில், கட்டிடம் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேயர் பிரியா விளக்கம்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சியிடம் கட்டிடத்தை இடிப்பதற்கு முறையாக அனுமதி பெற்று உள்ளார்கள். ஆனால், பேரிகாட் அமைக்க வேண்டும், வலைகளை போட வேண்டும் என கட்டிட இடிப்பின்போது சென்னை மாநகராட்சி விதித்து இருக்கும் எந்த விதிமுறைகளையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. கட்டிட விபத்து தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கையை மாநகராட்சி எடுக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications