சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்..பல ஊர்களில் மழை பட்டையைக் கிளப்புமாம்..எங்கெல்லாம் தெரியுமா?
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, கடலூரில் 39 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டையில் 38 டிகிரி செல்கியஸ் அளவிற்கு வெப்பம் பதிவானது.
பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, களியல் பகுதியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, சிவலோகம் பகுதியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோடை வெயிலை தணிக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா
மிதமான மழை
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Recommended Video
கனமழை பெய்யும்
26ஆம் தேதியன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27,28ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
சூறாவளிக் காற்று வீசும்
24.05.2022, 25.05.2022: தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, தெற்கு கேரளா, தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதி, குமரிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.