சென்னையில் புத்தம் புதிய அரசு பேருந்தின் நிலையை பாருங்க.. பொங்கிய நெட்டிசன்.. உடனே எம்டிசி விளக்கம்
சென்னை: சென்னை மாநகரில் ஓடும் புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை மாநகர போக்குவரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை என்றும் புதிய பேருந்துகளின் நிலையை பாருங்கள் என்று விமர்சனங்கள் எழுந்தது. இதுபற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. தமிழக அரசுக்கு புதிய பேருந்துகளை பராமரிக்க தெரியவில்லை என்ற விமர்சனத்திற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் பல பேருந்துகள் மிகவும் பழைய பேருந்துகள் ஆகும். புதியபேருந்துகள் வாங்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதுபற்றி கடந்த ஆகஸ்ட்மாதம் விளக்கம் அளித்த தமிழக அரசின் போக்குவரத்து துறை தமிழகத்தில் 1,064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 1,796 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறியது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2022-23-ம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 833 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மீதமுள்ள 167 பேருந்துகள் வரும் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டு, 910 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தொடர்ந்து 2023-24-ம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 888 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76.34 கோடி ஒதுக்கப்பட்டு 154 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதையடுத்து 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 503 பேருந்துகளுக்கு டெண்டர் கோரி ஆணை வழங்கப்பட்டு, வரும் நவம்பர் மாதத்துக்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளன.மேலும் 2,544 பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதுதவிர ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 2,166 பிஎஸ்-6வகை டீசல் பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 552 தாழ்தளப் பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, 59 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 493 பேருந்துகள் வரும் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். மேலும் 1,614 புதியடீசல் பேருந்துகள், புதிய 500மின்சார பேருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன.

அந்தவகையில் கடந்த ஆக.23-ம் தேதி வரை தமிழக அரசின் சார்பில் மொத்தமாக 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இதுவரை 1,796 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல 1,500 பேருந்துகளில் 1,064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது" என்று கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசால் அப்படி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட புதிய பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை அப்டேட்ஸ் என்ற பெயரில் பதிவுகளை வெளியிடும் நெட்டிசன், வெளியிட்ட பதிவில், இந்த பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தற்கு சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய தாழ்தளப் பேருந்துகள் தான். தமிழ்நாட்டில் பேருந்துகளை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட பதிலில், குறிப்பிட்ட பேருந்து, திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 91V வழித்தடத்தில் இயக்கப்படும் தாழ்தளப் பேருந்து ஆகும். இந்த பேருந்து எதிர்பாராமல் பெய்த மழையாலும், அந்த வழித்தடத்தில் நடந்து வரும் மெட்ரோ கட்டுமானப் பணிகளாலும் சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. நாங்கள் வாகனப் பராமரிப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு கவனித்து வருகிறோம். மேலும் எங்கள் குழு இந்த சிக்கலைத் தீவிரமாகக் கவனித்து வருகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி." என்று பதில் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications