சென்னையில் வீடு வீடாக சென்று உடல்வெப்ப நிலை பரிசோதனை.. மாநகராட்சி ஆணையர்
சென்னை: சென்னையில் வீடு வீடாக சென்று உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்யும் பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் சென்ற இவர் தெர்மல் ஸ்கேனிங் கருவியை வைத்து பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் : வீடு வீடாக சென்று 3 ஆயிரத்து 500 நபர்களுக்கு உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனாவுக்கு சிகிச்சை- வியாசர்பாடியில் மேலும் ஒரு சித்த மருத்துவமனை - சென்னை மாநகராட்சி
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 95 பேருந்துகள் மூலமாக தூய்மைப் பணியாளர்களை பணிக்கு அழைத்து வருகிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரண்டு வேளை ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படுகிறது.
வாரம் ஒரு முறை
தினமும் ஒரு மாஸ்க், வாரம் ஒரு முறை கிளவுஸ் என்ற முறையில் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களை கடந்து தற்போது வரை தூய்மைப் பணியாளர்கள் நலமுடன் பணியாற்றி வருகிறார்கள். மாதத்திற்கு 10 நாட்கள் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வைட்டமின் மற்றும் ஸிங்க் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
120 பேருக்கு
தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களை பொறுத்தவரை 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 15 பேர் நலமாகி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். போலி இ பாஸ் கொண்டு வரும் பொதுமக்கள் அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இதே மாதிரியான நேரத்தில் தனது உயிர்களை மதிக்காமல் வெளியே சுற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இ பாஸ் சேவை
இ பாஸ் சேவை சென்னை மாநகராட்சி பொருத்தவரை அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. இறப்பு, கல்யாணம் மற்றும் மருத்துவ உதவிக்கு மட்டும்தான் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எதற்கும் தற்போது வரை கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.