பெருங்களத்தூர் விபத்து.. டயர்கள் நெருப்பை கக்கும் அளவுக்கு ஸ்பீட்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னை: சென்னை பெருங்களத்தூர் அருகே கார் விபத்துக்குள்ளான 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அவை பார்ப்பதற்கே பதற வைக்கும் அளவுக்கு உள்ளது.
Recommended Video
சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் முடித்த 5 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளனர்.

பொருட்கள்
பின்னர் நண்பர்களுடன் திநகரில் பொருட்களை வாங்கிவிட்டு இரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இவர்கள் காரைப்பேட்டை பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். உடன் இருந்த நண்பர்களிடம் வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வருவதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். சொகுசு காரை மேட்டுரை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

தனியார் ஐடி நிறுவனம்
அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே அடையாளம் தெரியாத வாகனம் நவீன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த டிரைலர் லாரி மீது மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது.

சிசிடிவி காட்சிகள்
இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த அப்பளமாக நொறுங்கிய வாகனத்திலிருந்து உடல்களை மீட்டனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

விபத்து
அதில் இரவு 1.45 மணிக்கு அந்த கார் மீது மர்ம வாகனம் மோதியதில் நிலைத்தடுமாறி டயர்கள் சாலையில் பயங்கரமாக உரசி நெருப்பை கக்கும் அளவுக்கு இரு டெம்போக்களை தாண்டி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் அடியில் கார் சிக்கிக் கொண்டது. அந்த விபத்தில் காரானது அப்பளம் போல் நொறுங்கியது.

பதை பதைக்கும் காட்சிகள்
இதில் 5 பேர் பலியாகிவிட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அது வைரலாகி நெஞ்சம் பதை பதைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த வீடியோ பார்க்கும் போது ஏதோ ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சி போல் இருக்கிறது. சொகுசு கார்களை ஏதோ ரேஸ் கார் போல் ஓட்டி இது போல் விபத்துகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications