சினேகிதனே.. சின்னாபின்னமான சிறை பறவைகள்.. செய்வினை எடுக்க வந்தவர்களுக்கே 'செய்வினை'
சென்னை: செய்வினை எடுப்பாக கூறியவர்களுக்கு செய்வினை நடந்திருக்கிறது. அதாவது செய்த வினைகளுக்கு பலன் நடந்துள்ளது. போலி மந்திரவாதியை தோழியுடன் தூக்கிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 54 வயதாகும் மோகன்நாத் , தீவிர சாய்பாபா பக்தர் ஆவார்.இவர் தனது வீட்டில் மாதந்தோறும் சாய்பாபா பூஜை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த பூஜையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மோகன் நாத் சாய்பாபா பக்தர் என்பதை அறிந்து கொண்ட புதுச்சேரியைச்சேர்ந்த சபரிநாதன் (40), ராதா என்ற சுப்புலட்சுமி (43) ஆகியோர் கே.கே.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் வைத்து சந்தித்தனர். அவரிடம் தாங்கள் தீவிர சாய்பாபா பக்தர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டதுடன் மோகன்நாத் வீட்டில் நடந்த சாய்பாபா பூஜையில் சபரிநாதனும், ராதாவும் கலந்து கொண்டு அவரை நம்ப வைத்துள்ளனர்.
அப்போது திடீரென்று சாமி அருள் வந்து குறி சொல்வது போல, சபரிநாதன் படுபயங்கரமாக நடித்துள்ளார். அப்போது மோகன்நாத்தின் உறவினர்கள், அவருக்கு செய்வினை வைத்திருப்பதாகவும், அதனால் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்று சாமி குறி சொல்வது போல் சபரிநாதன் கூறியிருக்கிறார்.
இதை சாய் பாபாவின் தீவிர பக்தரான மோகன்நாத் உண்மை என்று நம்பி உள்ளார். அத்துடன் செய்வினை கோளாறை சரி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று சபரிநாதனை பார்த்து கேட்டார்.
மாந்தீரிக பூஜை அதற்கு மாந்திரீக பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று சபரிநாதன் சொல்லியிருக்கிறார். அதற்கு மோகன் நாத்தும் ஒப்புக்கொண்டார். பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என்று சபரிநாதன் சொன்னார். அதை ஏற்று 15 பவுன் நகைகளை மோகன் நாத் கொடுத்துள்ளாராம் பூஜைக்கான செலவு என்று கொஞ்சம், கொஞ்சமாக ரூ.3 லட்சம் வரை சபரிநாதன், மோகன்நாத்திடம் கறந்திருக்கிறார். ராதா தன்னுடைய சீடர் என்று கூறி இருவரும் சேர்ந்து சபரிநாதனை ஏமாற்றி 15 பவுன் நகையை பூஜையில் வைத்து தருவதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். அதன்பிறகு சபரிநாதனும், அவரது தோழி ராதாவும் திடீரென்று காணாமல் போய் விட்டனர்.
கே.கே.நகரில் அவர்கள் வசித்த வாடகை வீடு பூட்டிக்கிடந்தது. செல்போனும் 'சுவிட்ச்ஆப்' ஆகி விட்டது. 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை சுருட்டிக்கொண்டு, சபரிநாதனும், ராதாவும் தப்பி ஓடியது அப்போது தான் மோகன் நாத்திற்கு தெரியவந்தது.இதையடுத்து மோகன்நாத், தான் மோசம் போனது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில், கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சபரிநாதன் ஒரு போலி மந்திரவாதி என்றும், அவர் மீது புதுச்சேரியில் இதுபோல நிறைய பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலி மந்திரவாதி சபரிநாதன், அவரது சீடரும், தோழியுமான ராதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகைகளும், ரூ.60 ஆயிரமும் மீட்கப்பட்டது.
சபரிநாதன் மோசடி வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்த போது, ராதாவை எப்படியோ சந்தித்தார். விருதுநகரைச் சேர்ந்த ராதா வேறொரு வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவந்து ஒன்றாக சென்னை வந்து, கே.கே.நகரில் தங்கி, மோகன் நாத்தை ஏமாற்றி பணம் நகைகளை பறித்து உறுதியானது.












Click it and Unblock the Notifications