இனி இவங்களுக்கு எல்லாம் நைட் ஷிப்ட் கிடையாது.. போலீசாருக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை கமிஷனர் அருண்!
சென்னை: 59 வயது நிரம்பிய போலீசாருக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை இரவுப் பணியிலிருந்து விலக்கு அளித்து சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெறும் வயதை நெருங்கும் போலீசார் வயது மூப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் பணிகளை கௌரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரின் அறிவிப்புக்கு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.
சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க காவல்துறையினர் எந்நேரமும் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாகச் செயல்படும் காவல்துறையினர், அதிகப் பணிச் சுமையால் அவதிப்படுவதும் நடக்கிறது. இரவு நேரங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்க, தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இரவு ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களிலும் குடும்பத்தைப் பிரிந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெறும் நிலையில், 59 வயது நிரம்பிய போலீசாருக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை இரவுப் பணியிலிருந்து விலக்கு அளித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய போலீசாரின் வயது மூப்பையும், நீண்ட பணி காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து போலீசாருக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
59 வயதை எட்டும் காவலர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஒரு வருட காலத்திற்கு, இரவு பணியில் இருந்து விலக்கு அமலில் இருக்கும். இந்த உத்தரவை அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications