இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வழிகாட்டிய நீதிமன்றம்.. சென்னை போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை
சென்னை: நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விசாரித்து விரைவில் தீர்வு காண சென்னை போலீஸ் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தூசி தட்டப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சென்னையை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை, கல்வி, வியாபாரம், சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக மக்கள் சென்னைக்கு வருகின்றனர். இப்படி இருக்கையில் சென்னையில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிசிடிவி கேமிரா, கைரேகை, குற்ற வழக்கு பின்னணி ஆகியவற்றை கொண்டு குற்றத்தை கண்டுபிடிக்க காவல்துறை தொடர்ந்து போராடி வருகிறது.

இருப்பினும் சில குற்றங்களுக்கு விடை காண முடிவதில்லை. இப்படியாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இது காவல்துறைக்கு சவாலாக இருந்தாலும், மறுபுறம் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ்நாடு போலீஸ் 'தனிப்புலனாய்வு பிரிவை' தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை முடிக்க சென்னை மற்றும் கோவையில் தனிப்புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 12 காவல் மாவட்டங்களில் புதிய புலனாய்வு பிரிவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, ஏழு கிணறு, ராயபுரம், பேசின்பிரிட்ஜ், தரமணி, மாம்பலம், நந்தம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கீழ்ப்பாக்கம், அபிராமபுரம், சூளைமேடு, பெரவள்ளூர், வளசரவாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் தனிப் புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு நிலுவையில் உள்ள வழக்குகள் மட்டுமல்லாது, கொலை, ஆதாய கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், துப்பாக்கி, ஆயுதம் மற்றும் வெடிபொருள் தொடர்பான வழக்கு, பணத்திற்காக ஆள் கடத்தல், மதம் மற்றும் ஜாதி ரீதி தொடர்பான வழக்கு மற்றும் துணை ஆணையர்கள் கூறும் முக்கிய வழக்குகள் என 9 விதமான வழக்குகளையும் இந்த தனிப்புலனாய்வு பிரிவு கையாளும். இவர்கள் கையாளும் வழக்குகளில் குற்றப்பிரிவு போலீஸ் உதவ வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த தனிப்புலனாய்வு பிரிவில் பணியாற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். அப்படி அவசியமெனில் காவல் ஆணையர் அனுமதி பெற வேண்டும். தனிப்புலனாய்வு பிரிவின் வேலை கடந்த 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 9 குறிப்பிட்ட வழக்குகளை தவிர சட்ட ஒழுங்கு அமலாக்கம், சிறப்பு சட்டம் அடிப்படையிலான வழக்குகள் குறித்தும் தனிப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது.












Click it and Unblock the Notifications