'பரபரப்பு..' விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.. உடனடியாக களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை
சென்னை: தலைநகர் சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாகத் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்பு படைகள் விரைந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என்பதால் ரெட் அலர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கனமழை
குறிப்பாக கிண்டி, தாம்பரம், வேளச்சேரி, எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் ஏறப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியதால், தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு- பூந்தமல்லியை இணைக்கும் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள்
கடந்த 12 மணி நேரமாகத் தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் தலைநகரில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகள் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உதவி எண்கள்
அதேபோல சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் வட சென்னை பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். மேலும், வெள்ள பாதிப்பு உதவிகளுக்கு 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அச்சம்
கனமழையால் தலைநகர் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் எங்கு 2015 பெருவெள்ளத்தின் போது நடந்ததை போலவே மீண்டும் எதாவது அசம்பாவித சம்பவம் நிகழுமோ எனப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும், அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து கூறப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படை
இதற்கிடையே கனமழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கத் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 1 குழுவும் மதுரைக்கு மட்டும் 2 குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications