மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!
சென்னை : பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கை ரயில்வே போலீசார் விசாரித்து வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றிருந்த மாணவி சத்யப்பிரியாவை, சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சத்யா
சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தவர் சத்ய பிரியா (20). இவரது தந்தை ஆக்டிங் டிரைவாக பணியாற்றி வந்தவர். தாய், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவி சத்யா தி.நகரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்துள்ளார்.

ரயிலில் தள்ளிவிட்டு கொலை
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோதே சத்யாவின் கையைப் பிடித்து, தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார். இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்யா தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் சதீஷ் என்பவர் அவரை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் எனத் தெரியவந்தது.

கொடூரன் சதீஷ் கைது
இதனையடுத்து ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படைகளும் பரங்கிமலை காவல்துறையின் நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

காதலை ஏற்காததால் கொலை
கைது செய்யப்பட்ட சதீஷிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்யாவும் சதீஷும் முன்பு காதலித்து வந்ததும் பின்னர் சதீஷின் தவறான பழக்க வழக்கங்களால் அவருடனான உடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதால், மீண்டும் மீண்டும் அவரை பின் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார் சதீஷ். எனினும், சத்யா அவரை ஏற்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி சத்யாவை சதீஷ் கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது.

சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்நிலையில், ஒருதலைக் காதலால் மாணவி சத்யா, ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை ரயில்வே போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications