இளைஞரை தோளில் தூக்கி சென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை ஞாபகம் இருக்கா? அண்ணா விருது வழங்கி கவுரவிப்பு
சென்னை: சென்னை மழை வெள்ளத்தின் போது உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற பெண் காவலர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
Recommended Video
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அப்போது ஒரே நாளில் 200 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் முக்கிய இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்தது.
வெள்ளத்தில் சிக்கயவர்களை போலீஸாரும் மீட்புக் குழுவினரும் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்தபடி உடல் நலம் குன்றிய உதயா என்ற இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
குடியரசு தின கொண்டாட்டம்.. சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மரக்கிளைகள்
இதுகுறித்து தகவல் அறிந்த டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சம்பவ இடத்திற்கு விரைந்தார். கெண்டை கால் அளவுக்கு தண்ணீர் இருந்தது. மரங்களும் விழுந்திருந்தன. அதன் கிளைகளை அகற்றிய ராஜேஸ்வரி, அங்கு விழுந்து கிடந்த இளைஞரை தோளில் தூக்கிக் கொண்டு ஓடினார்.
மருத்துவமனை
பின்னர் அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். பெண் ஒருவராக இருந்து கொண்டு தைரியமாக இக்கட்டான சூழலில் துணிந்து செயல்பட்டது பார்ப்போருக்கு முன்னுதாரணமாக இருந்தது. பெண்களின் மனதிடத்தை காட்டுவதாகவும் அமைந்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலை பாராட்டினார்.
ராஜேஸ்வரிக்கு விருது
இதையடுத்து டெல்லிக்கு சென்றிருந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பிரதமர் நரேந்திர மோடி , காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வீர தீர செயல் புரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு அண்ணா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
அதன்படி இன்று 73-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் காவல் துறையில் பல்வேறு விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். அதில் உயிருக்கு போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டிபி சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கினார்.
8 பேருக்கு அண்ணா விருது
2022ஆம் ஆண்டுக்கான வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் 8 பேருக்கு வழங்கப்பட்டது. ராஜேஸ்வரிக்கு அடுத்தது திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது அச்சமின்றி காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தனியரசுக்கு விருது வழங்கப்பட்டது. கோவை வனக்காவல்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே கார் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.