இதுதான் தாய்ப்பாசம்! கிட்ட வந்த ரயில்.. கடைசி நொடியில் மகள்களை காப்பாற்றிய தாய்! அடுத்து நடந்த பகீர்
சென்னை: பெற்ற மகள்களின் உயிரைக் காப்பாற்றத் தாயார் உயிரை விட்ட சம்பவம், தலைநகர் சென்னையில் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த உலகில் தாய்ப் பாசத்திற்கு எதுவும் ஈடு இணையே இல்லை என்பார்கள். எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் தாய் மட்டுமே தனது பிள்ளைகளுடன் கூட இருப்பார். தனது உயிரை கொடுத்தாவது பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றே எந்தவொரு தாயும் நினைப்பார்கள்.. அதுபோன்ற ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.

ஷாப்பிங்: தலைநகர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி சித்ரா.. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 42 வயதான சித்ரா நேற்றைய தினம் பொருட்களை வாங்க தியாகராய நகருக்குச் சென்றுள்ளார். நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது மகள்களையும் சித்ரா உடன் அழைத்துச் சென்றுள்ளார். அங்குப் பொருட்களை வாங்கிய பிறகு அவர் கிளம்பியுள்ளார்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து அவர், கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். சென்னை கோட்டை ரயில் நிலையம் வந்ததும், அவர்கள் வேளச்சேரிக்குச் செல்லும் பறக்கும் ரயிலில் ஏற திட்டமிட்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயில் சேவை வழக்கத்தை விடக் குறைவாகவே இருந்துள்ளது. இதனால் அவர் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
உயிரை விட்ட தாய்: கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலை அவர் கவனிக்காமல் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். ரயில் மிகவும் அருகில் வந்தவுடன் தான் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இதனால் தண்டவாளத்தை வேகமாகக் கடக்க முயன்றுள்ளார். இருப்பினும், அதற்குள் ரயில் மிகவும் அருகில் வந்துவிட்டது.
தனது மகள்களும் தண்டவாளத்தில் இருந்ததால் அவர்கள் மீது ரயில் மோதக் கூடாது என்பதற்காக மகள்கள் இருவரையும் அவர் தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளார். சித்ரா துரிதமாகச் செயல்பட்டதால் அவரது மகள்கள் மீது ரயில் மோதவில்லை. இருப்பினும், இதில் நிலைதடுமாறிய சித்ரா தண்டவாளத்தில் விழுந்தார். இதனால் ரயில் அவர் மீது மோதியது..
உயிரிழப்பு: இதனால் சித்ரா தனது மகள்கள் முன்னிலையிலேயே ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சித்ரா உடலை மீட்ட எழும்பூர் போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தாய், தனது மகள்கள் கண் முன்னாலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் அவசரம் என்றாலும் கூட ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்களின் மேல் ஏறித் தான் நாம் தண்டவாளங்களைக் கடக்க வேண்டும். மாறாக டிராக்குகள் மீது ஏறிக் கடப்பது மிகப் பெரிய ஆபத்தையே ஏற்படுத்தும். இது குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் போதிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications