செஸ் ஒலிம்பியாட் டூ அண்ணா பல்கலை.! பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை.. பயண திட்டம் வெளியீடு!
சென்னை: பிரதமர் மோடி சென்னை ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக நாளை சென்னை வர உள்ள நிலையில், அவரது பயணத் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.
Recommended Video
சென்னையில் நாளைய தினம் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கிட்டதட்ட முடிந்துவிட்டது.
இதில் அனைத்து போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்
வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் இந்தப் போட்டியில், சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போட்டி நடைபெறும் இடமும் போலீசார் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். நாளை மாலை 6 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இதனால் அங்குப் பல அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பயணத் திட்டம் வெளியீடு
செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி நாளை இரவு ஆளுநர் மாளிகையிலேயே தங்குகிறார். அதைத் தொடர்ந்து மறுநாள் அவர் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயண விவர திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

குஜராத்தில் இருந்து
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 28) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். மாலை 4.45க்கு சென்னை வரும் அவர் சிறிது நேரம் அங்குள்ள ஓய்வறையில் ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் மாலை 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு 5.45 மணிக்கு அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்கரை தளத்திற்கு வருகிறார்.

ஆளுநர் மாளிகையில் ஓய்வு
அங்கிருந்து சாலை மார்க்கமாக 5.50 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைகிறார். அங்கு மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 7.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த உடன், அவர் அங்கிருந்து நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சுமார் 7.50 மணியளவில் செல்கிறார். அன்றைய தினம் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையிலேயே ஓய்வெடுக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் சாலை வழியாக ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் 42ஆவது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 11.35 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்குப் பிரதமர் மோடி செல்கிறார்.

பாதுகாப்புப் பணி
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் அவர் மீண்டும் குஜராத் திரும்புகிறார். மதியம் 2.15 மணி அளவில் அவர் குஜராத் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த இரு நாள் பயணத்திற்காகச் சென்னை முழுவதும் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications