பிரதமர் மோடி வருவதற்குள்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சிகள்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வருவதற்குள் செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே மாமல்லபுரம் பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து பிரதமருக்கு எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று அழைத்தனர்.

அண்ணா பல்கலைக்கழக விழா
இந்த தொடக்க விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ள மோடியின் பயண திட்டம் அமைக்கப்பட்டது. அதன்படி இன்று குஜராத்திலிருநது மதியம் 2.20 மணிக்கு சென்னைக்கு பிரதமர் வருவதாக இருந்தது.

வானிலை மாற்றம்
ஆனால் வானிலை மாற்றம் காரணமாக வேறு ஒரு விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி 25 நிமிடங்கள் தாமதமாக சென்னைக்கு வந்துள்ளார். அவர் வருவதற்குள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

செஸ் போட்டி
அடுத்ததாக செஸ் போட்டிக்கான முதல் காயினை முதல்வர் ஸ்டாலின் நகர்த்தி போட்டியை தொடங்கி வைக்கிறார். இவை எல்லாமே பிரதமர் விழாவுக்கு வருவதற்கு முன்னதாக நடந்து வருகிறது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் உள்ளனர். ஏற்கெனவே விழா விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும் பெயரும் இல்லாததால் கொதித்துள்ளனர்.

மேடையில் 3 நாற்காலிகள்
அதுபோல் மேடையில் பிரதமர், முதல்வர், செஸ் ஒலிம்பியாட் சேர்மேன் ஆகிய 3 பேருக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்க விமான நிலையம் சென்றுள்ள ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் எங்கே அமர்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை அவர்கள் வந்தவுடனும் கூடுதல் நாற்காலிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications