"Shame".. திட்டமிட்ட பயங்கரவாத சதிச் செயல்.. முதல்வர் கண்டனம் கூட தெரிவிக்கல.. பற்ற வைத்த எச்.ராஜா!
சென்னை : "சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. Shame" என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவையில் 23ஆம் தேதி நிகழ்ந்தது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து அல்ல, திட்டமிட்ட பயங்கரவாத சதிச் செயல் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் பலரும், கோவையில் நடந்தது விபத்து அல்ல, திட்டமிட்ட சதிச் செயல் என்றும், முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் பலியானார். முதலில் இச்சம்பவம் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜமேஷா முபீன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

5 பேர் கைது
ஜமேஷா முபின் வீட்டுக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து மர்ம பொருள் ஒன்றை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது. கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாய்ந்தது ஊபா சட்டம்
இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் 3 பேர்,முபினின் வீட்டில் இருந்து மூட்டையை தூக்கிச் சென்றவர்கள். கைதான 5 பேர் மீதும் ஊபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் வெடித்து விபத்து நடந்ததா, திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதா என்று அவர்களிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

எச்.ராஜா பரபர ட்வீட்
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "கோவையில் 23ஆம் தேதி நிகழ்ந்தது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து அல்ல, திட்டமிட்ட பயங்கரவாத சதிச் செயல். 5 நபர்கள் கைது என்று கோவை போலீஸ் கமிஷனர் பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல். சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை. Shame' எனத் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தோல்வி?
முன்னதாக, எச்.ராஜா பதிவிட்ட ட்வீட்டில், "கோவையில் கோட்டை மேட்டில் 23 ஆம் தேதி நடந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாகவே வாய்ப்புகள் அதிகம். இது intelligence failure என்பதிலும் சந்தேகமில்லை." எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவினர்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்ற வேண்டும் என்றும் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். பாஜக நிர்வாகிகளான அண்ணாமலை, சிபி ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலரும், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத சதிச்செயல் என்ற கோணத்திலேயே குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications