ஓமிக்ரான்.. தமிழகத்தில் அதிகரிக்கிறதா ஊரடங்கு கட்டுப்பாடு? நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 13ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended Video
தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ம் தேதியுடன் நிறைவடையை உள்ள நிலையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள்
தமிழ்நாட்டில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நவம்பர் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் B1.1 529 எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஓமிக்ரான் தொற்று இதுவரை 59 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

17 பேருக்கு ஓமிக்ரான் தொற்று
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 17, ராஜஸ்தானில் 9, குஜராத்தில் 3, கர்நாடகாவில் 2 மற்றும் டெல்லியில் ஒரு நபருக்கு புதிய உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கலாமா?
இந்நிலையில் ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்கும் பொருட்டு அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 13ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு டிசம்பர் 15ல் நிறைவு
தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ம் தேதி முடிவடைய உள்ளது. ஏற்கனவே சென்னையில் 65 சதவீதம் மக்கள் முகக் கவசம் அணிவதில்லை என சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், 3ஆம் அலை வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications