நீங்களே பேசி முடிச்சு முடிவெடுத்துடுங்க... நிர்வாகிகளிடம் பொறுப்பைக் கொடுத்த இ.பி.எஸ்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஊரகப் பகுதிகளில் இடம் கொடுப்பது பற்றி மாவட்டச் செயலாளர்களே முடிவெடுத்துக் கொள்ளுமாறு பொறுப்பைக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி .
அப்போது பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேசுங்கள் என்றும், பொறுமையுடன் உத்தி வகுத்து செயல்படுங்கள் எனவும் அறிவுரை நல்கியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊர்க உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை என நேற்று பிற்பகல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள்
தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, மிகுந்த கவனமுடன் களப்பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சுமூக உறவு
கூட்டணிக் கட்சியினருடன் சுமூக உறவை பின்பற்றுமாறும், ஊரகப் பகுதிகளில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடங்கள் பற்றி மாவட்டச் செயலாளர்களே பேசி முடிவெடுத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் மாவட்டச் செயலாளர்களுக்கு உற்சாகம் பீறிட்டுள்ளது.

தீவிர கவனம்
குறிப்பாக பிரச்சாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும், அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு முதல்வர் கட்டளை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications