தைரியமாக இருங்க.. நாங்குநேரி பள்ளி மாணவரின் தாயிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நாங்குநேரி சம்பவத்தால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர் மு.க ஸ்டாலின், மாணவனின் தாயார் அம்பிகாவதியிடமும் தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திரா செல்வி (14) என்ற மகளும் உள்ளனர் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பும், சந்திரா செல்வி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சின்னத்துரையும் சந்திரா செல்வியும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர்.

அன்றைய தினம் இரவு 10 மணியளவில் திடீரென அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அரிவாளால் வெட்டியதால் காயம் அடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இதுபற்றி சின்னத்துரை தனது தாயிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் சின்னத்துரையை பழிவாங்க மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் தொடர்பாக 7 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, அரிவாளால் வெட்டப்பட்டதில் காயம் அடைந்து பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அப்போது முதலவர் மு.க ஸ்டாலினும் தங்கம் தென்னரசு செல்போன் மூலம் மாணவரிடம் நலம் விசாரித்தார். தாயார் அம்பிகாவதியிடம் ஆறுதல் கூறிய முதல்வர் மு.க ஸ்டாலின், தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினார். முன்னதாக நான்குநேரி சம்பவம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட் பதிவில் கூறியிருந்ததாவது:- நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications