தீ விபத்து.. 36 குழந்தைகளை கண்ணாடியை உடைத்து காப்பாற்றிய நர்ஸ்.. நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்
சென்னை: 36 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் - தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் ஜெயக்குமாரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னையின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனையுமான கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. இங்கு பிரசவத்துக்காக , சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டத்தினரும் வருவார்கள்,. ஆந்திராவிலிருந்தும் பலர் வருவர்.
குழந்தைகள் மருத்துவமனையாகவும், பொதுமருத்துவமனையாகவும் கஸ்தூரிபாய் மருத்துவமனை இப்போது மேம்படுத்தப்பட்ட நிலையில் செயல்படுகிறது.
மின் கசிவு
இங்கு கடந்த மே 26ம் தேதி இரவு சுமார் 8-30 மணி அளவில் இரண்டாம் தளத்தில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் இங்குபேட்டர் அறையில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. அந்த புகையினால் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உயிருக்கே ஆபத்து எனும் சூழ்நிலையில் உடனடியாக விரைந்து செயல்பட்ட செவிலியர் ஜெயக்குமார் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து குழந்தைகளை காப்பாற்றினார். தீயையும் அணைத்தார். பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஜெயக்குமாரின் செயலை பலரும் பாராட்டினார்கள்
என்ன நடந்தது
இந்நிலையில் செவிலியர் ஜெயக்குமாரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் கடந்த 26.5.2021 அன்று இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
செவிலியர் ஜெயக்குமார்
அந்த அறையில் 36 பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும் மற்றும் 11 குழந்தைகளுடன் தாய்மார்களும் என 47 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைத்தார். தீயணைப்பு படை வீரர்கள் வரும் முன்னே, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றினார்.
நேரில் அழைத்து பாராட்டு
இந்நிகழ்வு குறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமாரை இன்று முகாம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவரது செயலைப் பாராட்டி சிறப்பு செய்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், செவிலயர் ஜெயகுமார், அவரது மனைவி தேவிகா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்" இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.