பாரத் நெட்.. மத்திய அரசின் திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்த ஸ்டாலின்! கிராமங்களுக்கு இணைய சேவை
சென்னை : தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம், முத்தலகுறிச்சியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி மூலம் இந்தப் பணியை தொடங்கி வைத்தார்.
ராஜபக்ச சகோதரர் பசில் ராஜபக்ச ராஜினாமா.. எம்.பி பதவியில் இருந்து திடீர் விலகல்.. இதுதான் காரணமா?
தமிழ்நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டம் உதவிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டம்
இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு இணைய வசதி வழங்கும் நோக்கில் பாரத் நெட் திட்டம் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மாணவர்கள் இணைய வசதி பெறுவதோடு கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை அவர்கள் அடைய இது உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாரத் நெட் திட்டம் தமிழ்நாட்டில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.
பாரத் நெட்
'பாரத்நெட்' திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் 'கண்ணாடி இழை கம்பி வடம்' மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டம், தமிழ்நாடு அரசின் "தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)" என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும்.
நான்கு தொகுப்புகளாக
இத்திட்டம் நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, தொகுப்பு A-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை (NOC), இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு B-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு C-ல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு D-ல் கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படவுள்ளது.
குறைந்த விலையில்
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு (டிஜிட்டல்) சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், இணையதள இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகளான தொலைபேசி, தொலைக்காட்சி & இணையம் ஆகியவற்றை வழங்க இயலும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும். அதோடு, புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும்.
கிராமப் புறங்களில்
தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் இந்தத் திட்டம் உதவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.