என்கிட்ட கேட்பாங்க.. நான் யார்கிட்ட கேக்குறது.. சொல்லாமல் செய்தார் சேகர்பாபு - முதல்வர் பேச்சு!
சென்னை : கோரிக்கை வைக்காமலேயே எனது தொகுதியிலும் ஒரு கல்லூரியை அமைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இன்று இந்தக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இதைப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் முதலமைச்சரிடத்தில் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முதலமைச்சராக இருக்கக் கூடிய நான் யாரிடம் கோரிக்கை வைப்பது? என்றும் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரான பிறகு 13 முறை
சென்னை கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுச் சுழன்று பணியாற்றி வந்தாலும் என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வருகிறபோது நான் அடையக்கூடிய மகிழ்ச்சி என்பது ஒரு அலாதியானது. கொளத்தூர் தொகுதிக்கு நான் செல்லப்பிள்ளை. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 13 முறை தொகுதிக்கு வந்துள்ளேன்.

10ல் 1 எனது தொகுதியில்
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம். பயிற்றுப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்த வேண்டும்" - என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த வகையில் ஒரு கல்லூரி என்னுடைய தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு அமைந்திருப்பது என்பது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை, கூடுதல் மகிழ்ச்சி. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அந்த துறையினுடைய அமைச்சர் அனைவராலும் செயல்பாபு என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய சேகர்பாபு மூலமாக அறிவிக்கப்பட்டது.

கோரிக்கை வைக்காமலேயே
உண்மையில் சொல்ல வேண்டுமானால், கோரிக்கை வைக்காமலேயே நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அதை நிறைவேற்றி தந்திருக்கிறார். அதற்காக நான் அமைச்சருக்கு என்னுடைய நன்றியை இந்தத் தொகுதி மக்களின் சார்பில், இந்தத் தொகுதினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், முதலமைச்சராக அல்ல. எம்.எல்.ஏ என்ற முறையில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் யாரிடம் கோரிக்கை வைப்பது?
பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் முதலமைச்சரிடத்தில் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முதலமைச்சராக இருக்கக் கூடிய நான் யாரிடம் கோரிக்கை வைப்பது? அதனால் தான் பத்தில் ஒரு கல்லூரியை நான் கோரிக்கை வைக்காமலேயே நம்முடைய அமைச்சர் சேகர்பாபு நம்முடைய தொகுதிக்கு நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.

ஒரே ஆண்டில் வளர்ச்சி
கல்லூரியில் 4 படிப்புகளுக்கு மொத்தம் இருக்கக்கூடிய 240 இடங்களுக்கு 1089 விண்ணப்பங்கள் வந்துள்ளது. ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு இக்கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது. இந்த ஆண்டு புதிதாக சேரவிருக்கும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளும் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications