மாதம்தோறும் கண்காணிப்பேன்.. அதிமுகவுக்கு ஒரே பதிலில் ஜெர்க் தந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளதோ அனைத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்; வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி உள்ளார்கள்.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக 13 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதன்படியே ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.

ஸ்டாலின் வழங்கினார்
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் பூசாரிகள் கலந்து கொண்டனர். அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.

ஸ்டாலின் பாராட்டு
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ' கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அமல்படுத்தி உள்ளோம் . அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அறநிலையத்துறையின் அனைத்து அறிவிப்புகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர் பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும். எள் என்று சொல்வதற்கு முன்னாள் எண்ணெய்யாக விரைந்து வேலை செய்கிறார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக செயல்படுகிறார். ஏராளமான கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அவர் அதிரடியாக மீட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்பதைவிட செயல் பாபு என்றே கூறலாம்.

மாதந்தோறும் கண்காணிப்பேன்
சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளதோ அனைத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்; வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வரின் இந்த பேச்சு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக வெளியிட்டு வருகிறார். அதனை முறைப்படி செயல்படுத்துவோம் என்பதை இன்றைய பேச்சின் மூலம் உறுதி செய்துள்ளார்.

நின்றுவிடாது
சட்டசபையில் பொதுவாகவே விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் கடந்த காலங்களில் வெற்று அறிவிப்புகளாக இருந்ததாக அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டி வந்தது. ஆனால் அப்படி ஒருகுற்றச்சாட்டு தங்கள் மீது வந்துவிடக்கூடாது என்பது கவனமுடன் உள்ள முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளதோ அனைத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்; வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்று அறிவித்துள்ளார்.

கண்காணிக்கும் முதல்வர்
ஏற்கனவே அமைச்சர்களின் செயல்பாடுகளை மாதம்தோறும் ஆய்வு செய்வேன், அவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை கண்காணிப்பேன் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதேபோல் தன்னை யாரும் சட்டசபையில் புகழ்ந்து நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தும் அதிர வைத்தார். ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்புகளுக்கு முக்கிய காரணம், வெளிப்படையாக நிர்வாகம், திறமையான நிர்வாகமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்..

யாருக்கெல்லாம் கிடைக்கும்
இதனிடையே முக்கியமான தகவலையும் இந்த செய்தியுடன் சொல்லிவிடும், மாதாந்திர ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்படும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பக்தர்கள் மற்றும் பூசாரிகளை அடையாளம் கண்டு வரும் 17-ஆம் தேதிக்குள் இந்து அறநிலையத்துறை சரக உதவி ஆணையர்கள் தங்கள் சரகத்தில் உள்ள அவர்களது விவரங்களை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் இதுபற்றி அறநிலையத்துறை அலுவலகத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.












Click it and Unblock the Notifications