பண்ணைக் காய்கறிகள் இனி உங்கள் வீட்டு வாசலில்.. நடமாடும் அங்காடிகளை துவங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: பண்ணைக் காய்கறிகளை இனி வீட்டு வாசலிலேயே வாங்கிக் கொள்ளும் வகையில் நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதேபோல் தென்னங்கன்றுகள், பயறு விதைகள், உள்ளிட்டவற்றையும் பயனாளிகளுக்கு தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இது தொடர்பாக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

உழவர் நலத்துறை
விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 15 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

வேளாண் வளர்ச்சித் திட்டம்
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்காகவும், கிராமங்கள் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்திற்காகவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் எனும் மாபெரும் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

தென்னங்கன்றுகள்
இதன் ஒரு பகுதியாக, ஒரு கிராம பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு, 11 கோடியே 49 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் 19.16 இலட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக,முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

நடமாடும் அங்காடிகள்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications