பொங்கல் பரிசு காத்திருக்கிறது! நாளை முதல்வர் ஸ்டாலின் முக்கிய மீட்டிங்! வெளியாக போகும் ஹேப்பி நியூஸ்
சென்னை : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத கால இடைவெளியே இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து பொங்கல் பரிசு நாளை அல்லது நாளை மறுநாள் அது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை தான் நினைவுக்கு வரும். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களால், கடந்த சில ஆண்டுகளாக அது அப்படியே மாறிவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் எவ்வளவு பணம் தருவார்கள்? இலவச வேட்டி சேலையோடு, ரொக்கமாகவா அல்லது பொருளாகவா என்பது குறித்து தொடர்ந்து சிந்தித்து வருகின்றனர். அதற்கும் காரணம் உண்டு.

பொங்கல் பரிசு
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2017 ஆம் ஆண்டு முதன்முறையாக 100 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் அப்போது அது வழங்கப்படவில்லை அதற்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி 2019 பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரை அடி கரும்பு வெல்லம், அரிசி உள்ளிட்டவற்றோடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதன் பிறகு 2020ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

திமுக அரசு
2021 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்தது. அதாவது முழு கரும்போடு பொங்கல் பொருட்களோடும் 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவித்தார். இது ஐந்து 500 ரூபாய் நோட்டுக்களாகவும் வழங்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பலத்த வரவேற்பு பெற்றாலும் தேர்தலுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கை என எதிர்கட்சிகள் விமர்சித்தன. ஆனாலும் 2500 ரூபாய் எடப்பாடிக்கு கை கொடுக்கவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு
அதன் பிறகு பொங்கல் பரிசு ரொக்கத்திற்கு பதிலாக பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

குற்றச்சாட்டுகள்
அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருந்ததாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதனால் முதல்வரே களமிறங்கி ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக சில நிறுவனங்களுக்கும் ரெட் கார்ட் போட வேண்டியதாயிற்று.

நாளை ஆலோசனை
இந்த நிலையில் தான், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நாளை தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அடுத்து பொங்கல் பரிசு நாளை அல்லது நாளை மறுநாள் அது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications