தூய்மைப் பணியாளர் மேரியின் நேர்மைக்கு கவுரவம்.. தலைமைச் செயலாளர் கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதம்..!
சென்னை: குப்பையில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட 100 கிராம் தங்க நாணயத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர் மேரிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கணேஷ் ராமன் என்பவர் தனது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி 100 கிராம் தங்க நாணயத்தை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அதனை பழைய கவரில் வைத்து கட்டிலின் மெத்தைக்கு அடியில் பாதுகாப்பு கருதி வைத்திருந்திருக்கிறார். இது தெரியாமல் வீட்டை சுத்தம் செய்த அவரது மனைவி ஷோபனா, தங்க நாணயத்துடன் கூடிய பழைய கவரையும் குப்பையில் வீசிவிட்டார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் அந்த தம்பதி அளித்த புகாரைத் தொடர்ந்து, துப்புரவு பணி மேற்கொளும் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு தங்க நாணயத்தை கண்டுபிடிக்குமாறு அறுவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் மேரி என்ற பெண் துப்புரவு பணியாளர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை போலீஸில் ஒப்படைத்தார். அந்த நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தங்கத்தை குப்பையிலிருந்து மீட்டுக் கொடுத்த மேரிக்கு காவல்துறை உயரதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தனது கைப்பட பாராட்டு பத்திரம் எழுதியிருக்கிறார். அதில், குப்பையில் கிடந்த தங்கத்தை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது எனக் கூறியிருக்கிறார்.
மேலும், நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல; தூய்மையான பணியாளர் என புகழாரம் சூட்டியிருக்கிறார். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள், குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளை காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் தான் சான்று என பாராட்டியிருக்கிறார்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
தலைமைச் செயலாளர் இறையன்பு நினைத்திருந்தால், தனது அலுவலக டைப்பிஸ்ட் ஒருவரிடம் கடிதம் அடித்து வரச்சொல்லி அதில் கையெழுத்திட்டு அனுப்பியிருக்க முடியும். ஆனால் இது போன்ற சம்பிரதாய பாராட்டுகளை தவிர்த்து, நேர்மையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தூய்மைப் பணியாளருக்கு தனது கைப்பட பாராட்டு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.