சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர் மீது சாதிவெறியுடன் தாக்குதல்.. எப்ஐஆர் கூட போடல! திருமாவளவன் ஆவேசம்
சென்னை: தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவன் ஜீவானந்தத்தை பள்ளியில் வைத்தே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும், விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனை காணொளியில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவாட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார். இந்த பள்ளியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவர் ஜீவானந்தம் மீது சக மாணவர்கள் 5 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மாணவருடன் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்
மேலும் சாதிவெறி காரணமாகவே அந்த மாணவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட மாணவர், குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி இருக்கிறார். அப்போது அவரிடம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவரின் தாய் பேசுகையில், கழிவறையில் வைத்து 5 முதல் 6 மாணவர்கள் அடித்து இருக்கிறாங்க..
என் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியிருக்கு.. நெஞ்சு எலும்பு உடைந்து போயிட்டு.. என் பையன் அழுதுக்கிட்டே அம்மாக்கிட்ட சொல்லுங்கன்னு ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கான்.. ஆனால் அங்க இருந்த ஆசியர்கள் யாரும் என்னிடம் சொல்லவில்லை. மாலையில் தான் போன் செய்தார்கள். என்ன நடந்தது என்று கேட்டேன்.. அதுலாம் ஒன்னும் இல்லைம்மான்னு சொன்னார்கள்.
எந்த நடவடிக்கையும் எடுக்கல
எதாக இருந்தாலும், தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார்கள்.. நான் இப்போது போலீசிடம் புகார் கொடுத்து இருக்கேன்.. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஐயா என கண்ணீர் மல்க பேசினார். அப்போது திருமாவளன், "காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்தார்களா" என கேட்டார்..
அதற்கு மாணவன் 'எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என கூறினார். இதையடுத்து திருமாவளவன், "நான் எஸ்பியிடம் பேசுகிறேன்" என்று கூறினார். இந்த வீடியோவினை திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
திருமாவளவன் கோரிக்கை
அதில் திருமாவளவன் கூறியிருப்பதாவது:- "தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில் 11ஆம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் அவர்களை பள்ளியில் வைத்தே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவனை காணொளியில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் 5 பேர் மீது பிசிஆர் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications