ரூ.524 கோடியில் கிடைத்த ஒப்பந்தம்.. தமிழக அரசின் செயலால் தொழில் அதிபர்களாக மாறும் தூய்மை பணியாளர்கள்
சென்னை: தமிழகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருகட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் வாகனங்கள் வாங்கி கொடுத்து தொழில் முனைவோர்களாக மாற்றி உள்ளது. அவர்களுக்கு ரூ.524 கோடி மதிப்புள்ள தமிழக அரசின் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை முன்னெடுத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்காக உள்ள ஆதிதிராவிடர்கள் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் வாகனங்கள் வாங்கி கொடுத்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தமிழக அரசு தொழில் முனைவோர் ஆக்கும் இந்த திட்டத்தின் முதல்கட்டமாக மொத்தம் 213 தூய்மை பணியாளர்களை தேர்வு செய்தது. அதன்பின்னர் அவர்களுக்கு, வாகனங்கள் வாங்குவதற்கான கடன் உதவி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக அவர்கள் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகளை கோரியிருந்தது. அதன் மொத்த மதிப்பீடு ரூ, 524 கோடியாகும்.
அதில் 2 ஆயிரம் கிலோ லிட்டர் வாகனத்திற்கு ஒரு மீட்டருக்கு ரூ, 17.60 என்றும், 6 ஆயிரம் கிலோ லிட்டர் வாகனத்திற்கு ஒரு மீட்டருக்கு 20.70 என விலை நிர்ணயம் செய்து ஒப்பந்த பணிகள் தூய்மை பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் எடுத்துள்ள தூய்மை பணியாளர்கள், அரசின் உதவியுடன் வாங்கி உள்ள இந்த வாகனங்கள் மூலம் இந்த பணியினை மேற்கொள்ள போகிறார்கள். மேலும் தங்களுக்கு கீழ் தேவைப்படும் ஊழியர்களை வேலைக்கும் அவர்கள் சேர்த்துக் கொள்ள போகிறார்கள்.
கடந்த காலங்களில் வெறும் தூய்மை பணியினை மேற்கொண்டு வந்த தூய்மை பணியாளர்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் முனைவோர்களாக உருவாகி உள்ளார்கள். இவர்களுக்கு இந்த பணி குறித்த பயிற்சி வகுப்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய மையத்தில் நேற்று அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications