"போட்றா வெடியை".. அடுத்த அறிவிப்பை தந்து திகைக்க வைத்த எடப்பாடியார்.. ஆச்சரியத்தில் மக்கள்..!
பயிர்கடன் தள்ளுபடிக்குரிய ரசீது வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்
சென்னை: ஒரே விஷயத்தில் அடுத்தடுத்து அதிரடிகளை தந்து திகைக்க வைக்க நம் முதல்வரால்தான் முடியும்.. அப்படித்தான் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, 2 நாளைக்கு முன்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.. இப்படி ஒரு அறிவிப்பை தமிழக மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.
விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் 2016-ம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அதி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
எடப்பாடியார்
சட்டசபையில் அன்று, எடப்பாடியார் இப்படி அறிவித்ததுமே அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. அவை முடிந்ததும், எடப்பாடியாரை சூழ்ந்து கொண்டு வாழ்த்தும் பாராட்டும் சொன்னார்கள்.. அவர்கள் மட்டுமில்லை, இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், பல கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
அரக்கோணம்
இந்நிலையில் மீண்டும் இது குறித்து இன்னொரு அறிவிப்பை முதல்வர் அறிவித்திருக்கிறார்.. அரக்கோணம் கைனூரில் முதல்வர் பழனிசாமி திறந்த வேனிலிருந்தபடி பிரச்சாரம் செய்தார்... அப்போது, விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் என்று கூறினார்.
நிம்மதி
இந்த அறிவிப்பை பொறுத்தவரை முதல்வருக்கு, மிக முக்கியமான திருப்தியை தந்து வருகிறது.. விவசாயிகளின் துயரை துடைத்தெறிந்ததான நிம்மதியும் தந்து வருகிறது.. அதனால்தான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்த அறிவிப்புக்கு வாழ்த்து சொன்னபோது, "அரசின் இந்த அதிரடியை போஸ்டர் ஒட்டி மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்" என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
ரசீது
அதுமட்டுமல்ல, இது அரசின் வெறும் நடைமுறை அறிவிப்பு என்று மட்டுமே நிறுத்திவிடாமல், அதை நிறைவேற்றி காட்டும் வகையில் ரசீதையும் வழங்குவதாக சொல்லி இருப்பதும், அதையும் 15 நாட்களுக்குள் தருவதாக சொல்லி இருப்பதும் மக்களை அசர வைத்து வருகிறது.. இதை எதிர்க்கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றன.