தீவிர அரசியல், தேர்தல் வெற்றி.. ஒரே போடு போட்ட சசிகலா.. அடுத்த வாரம் முதல்வர் டெல்லி பயணம்?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அடுத்த வாரம் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்குச் செல்லவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. அதை திறப்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் அந்த அலுவலகத்தை திறந்து வைக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இந்த திறப்பு விழாவுக்குத்தான் அடுத்த வாரம் முதல்வர், துணை முதல்வருடன் மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லிக்கு செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகத்திற்கு திரும்பியுள்ளார்.
அரசியல் களம்
மேலும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாகவும் அதிமுகவை மீட்பீர்களா என்ற கேள்விக்கு விரைவில் பதில் அளிக்கிறேன் என்றும் சசிகலா நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
துணை முதல்வர்
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா வருகை, தேர்தல் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இவர்களின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முதல்வர்
கடந்த மாதம் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து பேசினார். இந்த முறை மோடியையும் பாஜக தலைவர்களையும் முதல்வரும், துணை முதல்வரும் சந்திப்பார்களா என்ற தகவல்கள் தெரியவில்லை.