உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு
Recommended Video
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
இடஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வார்டு மறுவரையறைகள் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 9 மாவட்டங்களைத் தவிர 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.
மேலும் 9 மாவட்டங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்து 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

தேர்தல் பணிகளில் அதிமுக
உள்ளாட்சித் தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதை வரவேற்கிறோம். இத்தீர்ப்பை முழுமையாக ஏற்று உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அதிமுக ஈடுபடும்.

உழைத்து வெல்வோம்
உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்று அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறும் வகையில் கடுமையாக உழைப்போம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுகவின் வழக்கு என்ன?
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: வார்டு மறுவரையறைகளுக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக வழக்கு தொடரவில்லை.

ஜனநாயகத்தை காக்கும் தீர்ப்பு
திமுகவின் கோரிக்கையை ஏற்று வார்டு மறுவரையறைகளை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை திமுக வரவேற்கிறது.

அதிமுக அரசுக்கு பயம்
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குகிறது அதிமுக அரசு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடந்தால் குளறுபடி ஏற்படும்
தற்போதைய நிலையில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் தேர்தல் நடந்தால் குளறுபடி ஏற்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications