முன்னாள் துணைவேந்தர் புகழ்பெற்ற விஞ்ஞானி இன்னாசிமுத்துவுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது
சென்னை: சென்னை பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகங்களில் முன்னாள் துணைவேந்தரும் உயிரியல் விஞ்ஞானியுமான பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர் இன்னாசிமுத்துவுக்கு (இஞ்ஞாசிமுத்து) தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான டாக்டர் அப்துல் கலாம் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் விருதுகளை ஆளுமைகளுக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசின் டாக்டர் அப்துல் கலாம் விருது, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான இன்னாசிமுத்துவுக்கு(இஞ்ஞாசிமுத்து) வழங்கப்பட்டது.

1948-ம் ஆண்டு சிந்தலசேரியில் சவரிமுத்து, சலேத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் இன்னாசிமுத்து. 1972-ல் சென்னை பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பட்டப் படிப்பு, 1978-ல் முதுகலைப் படிப்பு நிறைவு செய்தார். 1981-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் தாவரவியல் துறையில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார்.
டெல்லி ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய இன்னாசிமுத்து, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியராக, துணைவேந்தராகப் பணியாற்றினார். 1993-1996-ல் சென்னை லயோலா கல்லூரியில் உயிரியல் ஆய்வக நிறுவன துணை இயக்குநராக பணிபுரிந்தார். சென்னை, கோவை பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
தற்போது பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் புகழ்பெற்ற ஆய்வறிஞரும் விஞ்ஞானியுமான இன்னாசிமுத்து (இஞ்ஞாசிமுத்து)வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான டாக்டர் அப்துல் கலாம் விருதை வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications