மேயர் பதவி! தேர்வு செய்வது மக்களா? கவுன்சிலர்களா? முதல்வர் விரைவில் முடிவு!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு மீண்டும் நேரடித் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
அண்மையில் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுகவுக்கு இந்த தேர்தல் பெருந்தோல்வியை கொடுத்தது. ஆனால் திமுக முறைகேடுகள் மூலமாக வெற்றி பெற்றதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 4 மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவை இடம்பெறுகின்றன. திமுக ஆட்சி அமைந்ததும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் புதியதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவகாசம் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக 4 மாத காலத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கறாராக உத்தரவிட்டது.

மேயர் உள்ளிட்ட பதவிகள்
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை ஆளும் திமுக அரசு தொடங்கி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவி நேரடியாக அல்லது மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது தொடர்ந்து வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் மேயர் பதவி தேர்வு முறை என்பது பந்தாடப்பட்டுதான் வருகிறது.

நேரடியாக மேயர்கள் தேர்வு
1996-ல் திமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதுவரை கவுன்சிலர்கள்தான் மேயரை தேர்ந்தெடுத்தனர். இதன்படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயரை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றார். 2001-ம் ஆண்டும் மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது சென்னை மாநகராட்சி மேயராக 2-வது முறையாக வென்றார் மு.க.ஸ்டாலின். ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஒரே நபர் இரு அரசு பதவிகளில் இருக்கக் கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வந்தார். இதனால் மேயர் பதவியை ராஜினாமா செய்த மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. பதவியில் மட்டும் நீடித்தார்.

குழப்பிவிட்ட அதிமுக
2006-ல் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதே அதிமுக அரசு 2011-ல் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தது. 2016-ல் அதிமுக அரசே, மேயர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்ய சட்ட திருத்தமும் கொண்டு வந்தது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தற்போதைய நிலையில் மாநகராட்சி மேயர் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனால் மீண்டும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தைப் போல மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் முறை கொண்டு வர வாய்ப்புள்ளது. இது தொடர்பாகவும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை எப்போது நடத்துவது என்பது தொடர்பாகவும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications