நியமனத்தில் பெரும் சர்ச்சை.. பதவியேற்பதில் குழப்பம்.. திண்டுக்கல் ஐ. லியோனி மாற்றப்படுவாரா?
சென்னை: தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டதாக அறிவித்ததில் சர்ச்சை வெடித்துள்ளது. இதனையடுத்து பாடநூல் கழகத் தலைவர் பதவியை திண்டுக்கல் ஐ.லியோனி ஏற்க முதல்வர் அனுமதி மறுத்துவருவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
தமிழக பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்ததுமே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அன்புமணி எதிர்ப்பு
அந்த அறிக்கையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்திருந்தார்.

ஓபிஎஸ் விமர்சனம்
அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓபிஎஸ், தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வரலாறு, அரசியல், பொது அறிவு, சமூகவியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்புத்தகங்களில் தரமான பாடங்களை வடிவமைக்கின்ற, தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து இருப்பது இந்தக் கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்தக் கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துகளை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி எனவும் விமர்சித்திருந்தார்.

திமுக தரப்பு
ஆனால் கடந்த காலங்களில் பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த வளர்மதி போன்றோரை முன்னிறுத்தி லியோனியின் நியமனத்தை திமுக தரப்பு நியாயப்படுத்தி வந்தது. இருந்தபோதும் பொதுவாக லியோனியின் நியமனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

லியோனி பதவியேற்கவில்லை
இந்த நிலையில் திண்டுக்கல் லியோனி, முறைப்படி நேற்று பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை வரை லியோனி பதவியேற்க வரவில்லை.

லியோனி மாற்றமா?
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, நேற்று காலையில் பதவியேற்க செல்வதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றுவிட்டு செல்ல நினைத்தாராம் லியோனி. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டிருக்கிறார் லியோனி. ஆனால் முதல்வர் தரப்பில், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. நேற்று மாலை வரையிலும் லியோனிக்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள். இதனால் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லியோனி பதவியேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து லியோனி மாற்றப்படுவாரா? அல்லது அவரையே பதவியேற்க ஸ்டாலின் அனுமதிப்பாரா ? என்ற விவாதம் தற்போது நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications