பள்ளிக்கு திடீரென வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் ... மாணவர்களுக்கு புத்தகங்கள் சாக்லேட் கொடுத்து வாழ்த்து
சென்னை மடுவன்கரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மாணவர்களுக்கு புத்தகங்கள் இனிப்புகள் கொடுத்து வாழ்த்தினார்.
சென்னை: ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
வேளச்சேரி மேம்பாலத்தை திறக்க செல்லும் வழியில் மடுவன்கரை பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரையிலான மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் பள்ளிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இனிப்புகள் கொடுத்தும் பூக்களை கொடுத்தும் மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை கருத்தில் கொண்டு புத்தாக்க பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.5 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு , வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிர்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலை பின்பற்றி மன மகிழ்ச்சி மற்றும் புத்தாக்க செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்று தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு இன்றைய தினம் ஆசிரியர்கள் கதைகளை கூறி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க சென்ற முதல்வர் மடுவன்கரை பள்ளியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு வந்த முதல்வருக்கு ஆசிரியர்கள் புத்தகங்களைக் கொடுத்து வரவேற்பு அளித்தனர். வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் புத்தகங்களை கொடுத்தும் மாணவர்களை வாழ்த்தினார். முதல்வருக்கு மாணவர்கள் நன்றி கூறினர்.
இதனையடுத்து வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,வேளச்சேரி புறவழிச்சாலையில், 2012 ஜூன் 29ஆம் தேதி ரூ.108 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தரமணி - லிங்க் ரோடு மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த 2 அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
இந்த பாலத்துக்கும் டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த 2015 டிசம்பர் 23ம்தேதி ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்கியது. இந்த பணி ஒப்பந்தப்படி கடந்த 2018 செப்டம்பர் 22ம்தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த மேம்பாலத்தில் தற்போது வரை இரண்டாம் அடுக்கு பணி முடிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வேளச்சேரி இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தரமணி முதல் 100 அடி சாலை வரை 1,028 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், காரில் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து வேளச்சேரி மேம்பாலத்தில் நடைபெற்று வரும் முதல் அடுக்கு பணிகளயும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதனையடுத்து கோயம்பேடு மேம்பாலத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications