"போதை பொருள் விற்பனை.. போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்.." சாட்டை சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் பெட்டிக்கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்ட ஒழுங்கு குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றினார்.

இப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மிக முக்கிய மாவட்டங்களாக இவை உள்ளன செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி அதிகம் காணக்கூடிய மாவட்டங்களாக உள்ளதால் இங்குக் குற்றங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகளும் காரணங்களும் அதிகம்.. எனவே காவல்துறையினர் அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும்
ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் அமைதி பூங்காவாகத் திகழ வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது மாநிலத்தில், பெரிய அளவில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை. இதன் காரணமாகத்தான் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது.
இந்த நிலை தொடர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து சட்ட ஒழுங்கை பேணி பாதுகாத்து அமைதியான சூழல் நிலவிட அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக கண்ணும் கருத்துமாக இருந்து தடுக்க வேண்டியது போதைப் பொருட்களைத் தான். போதைப் பொருட்களுக்கு எதிராக அதனை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருங்காலம் தாள் தலைமுறைகளைப் பாதுகாக்கும் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 11 தேதி போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனது தலைமையில் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.
மூன்று மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. மாணவ மாணவிகள் மத்தியில் போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் கேடுகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே பெட்டிக்கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் சில இடங்களில் காவல்துறையினருக்கு தெரியாமல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்ற பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதை நான் நம்பவில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் அதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இது போன்ற கஞ்சா, போதைப் பொருட்கள் கிடைக்கும் இடங்களில் இருக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் ஒழிப்பது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து ஆராய வேண்டும். சிக்கல்களைக் கண்டறிந்து அதை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் தோறும் நடைபெறும் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குட்கா ஆகிய பொருட்களை தடை செய்வது குறித்தும் வாரம்தோறும் உள்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் குறித்து இவ்வளவு விரிவாகக் கூறுவதற்குக் காரணம் , பல்வேறு குற்றங்களுக்கு மையப் புள்ளியாகப் போதைப் பொருட்கள் இருக்கின்றன. போதை தான் அதிகமான குற்றங்களுக்குத் தூண்டுகோலாக உள்ளது. போதை ஒழிப்பு குற்றத்தரிப்பில் மிக முக்கியமான ஒன்று" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications