புன்னகை வழியாக அவர் என்றும் நிலைத்திருப்பார்.. வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: "கொரோனா பேரிடர் கால நிவாரணமாக திமுக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார்." என வேலம்மாள் பாட்டியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடர் இரண்டாம் அலை ஊரடங்கின்போது, திமுக அரசு நிவாரணமாக வழங்கிய 2000 ரூபாய் பணத்தை வாங்கியபிறகு மலர்ந்த முகத்துடன் சென்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்னும் பாட்டியை ஜாக்சன் ஹெர்பி என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் அனைவருக்கும் தெரிந்த முகம் ஆனார்.

முதல்வர் ஸ்டாலின் 2 கட்டங்களாக வழங்கிய ரூ. 4000 கொரோனா பேரிடர் நிவாரணத்தொகை திட்டம் மக்களிடையே ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு ஒற்றை உதாரணமாக இந்த மூதாட்டியின் சிரிப்பு இருந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு எனத் தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்தார். திமுக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களிலும் வேலம்மாள் பாட்டியின் வெள்ளந்திச் சிரிப்பு இடம்பெற்றது.
கடந்த ஆண்டு மழை பாதிப்பை பார்வையிட கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாக அவரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் அஞ்சுகிராமம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. அதற்கு கட்டவேண்டிய குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையையும் திமுக நிர்வாகியான பூதலிங்கம் என்பவரே செலுத்தினார்.
தற்போது நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வசித்து வந்த வேலம்மாள் பாட்டி, கடந்த சில நாட்களாகவே வயது முதிர்வால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு தவித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு காலமானார். வேலம்மாள் பாட்டி மறைவு அப்பகுதியினர் மட்டுமல்லாது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications