நல்ல பெயர் எடுங்கள்...தவறு செய்தால் உடனே பதவி நீக்கம் - அமைச்சர்களை அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்
10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி அட்சிக்கு வந்துள்ளதால், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: புதிதாக பதவி ஏற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் மக்கள் பணிகளில் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர்கள் தவறு செய்தால், அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற உடனேயே புதிய அரசு செயலில் இறங்கியது. பலவித மக்கள் நலத் திட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இவை உடனடியாக செயலாக்கத்திலும் வந்துள்ளன. ஞாயிறுக்கிழமையன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின்.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான பலவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, தமிழக நிவாரணத் தேவைகளைப் பற்றி விரிவான ஒரு கடிதத்தையும் முதல்வர் பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.

தவறு செய்யாதீர்கள்
அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் நேர்மையாகவும், நியாயமாகவும் தங்கள் பணிகளில் ஈடுபட வேண்டும். தவறு செய்யும் அமைச்சர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பணி நியமனங்கள்
அமைச்சர்கள் தங்கள் துறைகளின் பணி நியமனங்கள், அமைச்சர்களின் பி.ஏக்களின் நியமனங்கள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நேரடி புகார்
தங்கள் தொகுதிகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து யாரும் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொள்ளவோ, தொலைபேசியில் அழைக்கவோ கூடாது என்று முதல்வர் தெரிவித்தார். காவல்துறை தன் அதிகாரத்துக்குள் இருப்பதால், எந்த பிரச்சனையாக இருந்தாலும், தன்னிடம் நேரடியாக புகார் அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களிடம் கூறினார்.

மக்கள் பணி
அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்கள் நம் கட்சியில் பலர் இருக்கிறார்கள். பலருக்கு இதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொறுப்பு உள்ளது
10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி அட்சிக்கு வந்துள்ளதால், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி இப்போதய தலைமுறையினர் மட்டுமல்ல வருங்கால தலைமுறையினரும் பெருமையாக பேச வேண்டும் என்று ஆரம்பத்திலேயே சாட்டையை சுழற்ற ஆரம்பித்து விட்டார் மு.க ஸ்டாலின்.

அமைச்சர்கள் பதவி பறிபோகும்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் இருந்த பலரும் மியூசிக்கல் சேர் போல மாத மாதம் மாறிக்கொண்டிருப்பார்கள். அமாவாசை வந்தாலே ஒருவித அச்சம் அமைச்சர்கள் மத்தியில் ஏற்படும். அமைச்சர்கள் மீது புகார் எழுந்தாலே மாற்றி விடுவார். அதே பாணியை கையாள ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications