கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் முறைகேடு : அரசு அதிரடி நடவடிக்கை - கலக்கத்தில் அதிகாரிகள்
கூட்டுறவு கடன் சங்கங்களில் கவரிங் நகைகளை வைத்தும் நகைளையே வைக்காமலும் கடன் வழங்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் நகைகளை வைத்து பல கோடி முறைகேடாக கடன் பெற்றுள்ளது க
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற நகைக்கடன் முறைகேடு குறித்து தோண்ட தோண்ட பூதம் போல வந்து கொண்டே இருக்கிறது. கூட்டுறவு கடன் சங்கங்களில் கவரிங் நகைகளை வைத்தும் நகைளையே வைக்காமலும் கடன் வழங்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் நகைகளை வைத்து பல கோடி முறைகேடாக கடன் பெற்றுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கடன் தள்ளுபடி தொடர்பாக பணிகளில் கூட்டுறவு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கூட்டுறவு வங்கிகளில் மலைக்க வைக்கும் முறைகேடுகள்... விசாரணைக்கு வலியுறுத்தும் வேல்முருகன்..!
கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் நகைக் கடன் பெற்றதில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதும் தற்போது தெரியவந்துள்ளது. நாமக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் 10 ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முழு புள்ளி விபரங்கள்
சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து கூட்டுறவு நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
கடன் தொகை
இந்த ஆய்வில், கடந்த அதிமுக அரசின் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களுக்கான நகை கடன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள், தொகை, கடன் கணக்கு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பகுப்பாய்வு செய்ததில் நிறைய விதிமீறல்கள் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரூ.4.72 கோடி முறைகேடு
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில், திரு.ரத்தன் லால், அவரது மனைவி திருமதி. சுந்தரி பாய், மகன்கள் ராஜ்குமார், தன்ராஜ் மற்றும் மருமகள்கள் கான்கி தேவி, மஞ்சு என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்கள். இவர்கள் மொத்தம் 1685 எண்ணிக்கையிலான நகைக் கடன்கள் மூலம் ரூ.4.72 கோடியினை முறைகேடான வழிகள் மூலம் கடனாகப் பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் முறைகேடு
அதே போல கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மிகவும் வறியவர்களுக்கான அந்தியோதயா அன்னா யோஜனா திட்ட அட்டை வைத்திருப்பவர்களின் பெயரிலும் நூற்றுக்கணக்கான கடன்கள் மூலம் பல கோடிகள் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து முறைகேடான வழிகளில் கடன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
நகையே இல்லாமல் கடன்
இன்னும் சில கூட்டுறவு கடன் சங்கங்களில் போலி கவரிங் நகைகளை வைத்தும் நகைளையே வைக்காமலும் கடன் வழங்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப் பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகுதியானவர்களுக்குத் தள்ளுபடி
இதனிடையே நகைக்கடன்முறைகேடு தொடர்பாக தினந்தோறும் தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
நகைக்கடன் தள்ளுபடி
5 சவரன் வரையிலான நகைக்கடன் மட்டுமின்றி கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகைக் கடன்களையும் 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. எனவே கூட்டுறவு நிறுவனங்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த நகை கடன்களையும் 1.04.2021 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களையும் 100 சதவிகிதம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 சதவிகிதம் ஆய்வு
இதற்காக கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பெறப்பட்ட நகைகடன்களை 100 சதவிகிதம் ஆய்வு செய்யும். சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20க்குள் அறிக்கை
இந்த குழுக்கள் ஆய்வு பணியை நவம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்து சரக துணை பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, இறுதி அறிக்கை நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் மண்டல இணை பதிவாளர்கள் வாயிலாக, பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த ஆய்வுக்கு பின் அதிரடி நடவடிக்கை இருக்கும் என்பதால் முறைகேடாக கடன் பெற்றோர் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள்,கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்களும் பீதியடைந்துள்ளனர்.