கோவை சுபஸ்ரீ மரணம்! ஈஷா யோகா மையம் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை! சட்டசபையில் முதல்வர் தகவல்!
சென்னை: கோவை சுபஸ்ரீ மரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் நிச்சயம் உண்மை கண்டறியப்படும் எனவும் சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவல்துறையை தன் வசம் வைத்திருப்பதால் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதியில் பதிவாகியிருக்கக் கூடிய கண்காணப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.
கோவையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் அளித்த பதிலுரை வருமாறு;
''சுபஶ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.''
''பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஶ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (postmortem).''
''சுபஶ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் (CCTV) பதிவுகள், சுபஶ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.