சென்னை கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவி மூச்சுத்திணறி பலி! அளவுக்கு அதிகமாக மது குடித்ததுதான் காரணமா?
சென்னை: சென்னையில் கல்லூரியில் படிக்க வந்த மாணவி சக நண்பர்களுடன் மது அருந்தியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அனிதா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேளம்பாக்கத்தை அடுத்த தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். இவர் ஏகாட்டூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் ஊரில் இருந்து திரும்பிய அனிதா, தனது தோழியின் அறையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. அப்போது சக மாணவிகளுடன் சேர்ந்த இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் அனிதாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனால் பதறிய சக மாணவிகள், அனிதாவை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றிய கேளம்பாக்கம் போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மதுவால் பலர் இறக்கும் சம்பவங்கள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் பள்ளி காலத்திலிருந்தே ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் நர்சிங் கல்லூரியிலும் ஆகாஷ் என்ஜீனியரிங் கல்லூரியிலும் படித்து வந்தனர். இவர்கள் தனிமையில் சந்தித்த போது மது குடித்துவிட்டு போதை அதிகமானதும் போதை காளானை பறித்து மதுவுடன் கலந்து சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் தூங்கிவிட்டனர். இதையடுத்து அடுத்த நாள் ஆகாஷ் எழுந்துவிட்டார். ஆனால் அந்த மாணவி உயிரிழந்துவிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் அருகே உள்ள சின்னராஜகுப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு. இவருடைய மகள் 10 ஆம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்களை பெற்றிருந்தார். தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்ததால் மனமுடைந்த மகள், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அது போல் கடந்த 2022 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் வகுப்பறையில் மேஜை மேல் அமர்ந்து கொண்டு மதுவை குளிர்பானத்தில் குடித்த காட்சிகள் வைரலாகின.












Click it and Unblock the Notifications