அம்பேத்கரிஸ்ட் VS கம்யூனிஸ்ட்.. “நட்சத்திரம் நகர்கிறது” படத்தால் சர்ச்சை! பா.ரஞ்சித் மீது விமர்சனம்
சென்னை: பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கருத்துக்கள் இருப்பதாக கூறி கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வைக்கப்பட்டு வருகின்றன.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவரது திரைப்படங்களில் சாதிய, மதவாதத்துக்கு எதிரான அரசியல் கருத்துக்கள் அதிகம் இடம்பெறும்.
இதன் காரணமாக இவருடைய ஒவ்வொரு திரைப்படங்கள் வெளியாகும்போதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. நீலம் புரொடெக்சன்ஸ் மூலமாக இவர் தயாரித்த பரியேரும் பெருமாள், குண்டு திரைப்படங்களும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
மிஸ்டர் பா. ரஞ்சித்.. பெண்ணும் பெண்ணும் லவ் பண்ணியிருந்தால் நீங்க பிறந்திருக்க மாட்டீங்க: தடா ரஹீம்
நட்சத்திரம் நகர்கிறது
அந்த வகையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு தென்மா இசையமைத்து இருந்தார்.
விவாதங்கள்
இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோதே அதில் இடம்பெற்ற வசனங்கள் விவாதங்களை உண்டாக்கின. காதல், சாதி ஆணவக்கொலைகள், LGBTQ காதல் போன்றவை குறித்து வெளிப்படையான வசனங்கள் அதில் இடம்பெற்றன. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இதை வைத்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
கம்யூனிஸ்டுகள் விமர்சனம்
இந்த நிலையில், திரைப்படம் கடந்த புதன் கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிகளவிலான ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதால் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் திரைப்படத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வசனத்தால் விவாதம்
சமூக வலைதளங்களில் கம்யூனிஸ செயல்பாட்டாளர்கள் பலரும் பா.ரஞ்சித்தை விமர்சித்து வருகின்றனர். கதாநாயகியிடம் கலையரசன் நீங்கள் கம்யூனிஸ்டா என்று கேட்க அம்பேத்கரிஸ்டு என்று தெரிவிக்கிறார். கம்யூனிஸ்டுகள் சாதிய புரிதல் அற்று இருப்பதாக படத்தில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிபிஎம் செல்வா கருத்து
"கம்யூனிஸ்டுகள் பல இடங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி இருப்பதாகவும், மற்ற பகுதிகளை விட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறைவாக இருப்பதற்கு கம்யூனிஸ்டுகளே காரணம் என்றும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நின்ற மார்சிஸ்ட் தலைவரையே கொன்றுள்ளனர்." என்று கூறுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா.
இயக்குநர் அதியன் ஆதிரை
இதுகுறித்து பா.ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை எடுத்த அதியன் ஆதிரை தெரிவிக்கையில், "நான் ஒரு கம்யூனிஸ்ட்டை பார்த்து (பாக்கெட்டில் உள்ள அடையாளத்தை பார்த்து) நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலா இருக்கீங்கனு கேட்டேன் அதற்கு அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.(மார்க்சிஸ்ட்). என்றார். இதைப்போல் இன்னும் சில தோழர்களிடம் வெவ்வேறு சமயங்களில் கேட்டுயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தோழர்கள் பதறியடித்துக்கொண்டு நான் cpi.cpm.ml.லெனிஸ்ட். மாவோயிஸ்ட் என்று உட்பிரிவுகளோடு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒரு அம்பேத்காரிஸ்டை பார்த்து நீங்கள் கம்யூனிஸ்ட்டா என்று கேட்டால் அவள் அம்பேத்காரிஸ்ட் என்று சொல்லக்கூடாது என்பது என்ன வகையான தத்துவ புரிதல் என்றே தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு அம்பேத்காரிஸ்டை பார்த்து நீங்கள் கம்யூனிஸ்ட்டா என்று கேட்டால் அவள் அம்பேத்காரிஸ்ட் என்று சொல்லக்கூடாது என்பது என்ன வகையான தத்துவ புரிதல் என்றே தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.