நடிகை ஓவியா மீது சைபர் கிரைம் பிரிவில் புகார்.. களத்தில் இறங்கிய பாஜக
சென்னை: நடிகை ஓவியா மீது பாஜக சார்பாக சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று (பிப்.14) சென்னை வந்திருந்தார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், சென்னை-வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓவியா ட்வீட்
இந்நிலையில், மோடி சென்னை வரவிருந்ததை முன்னிட்டு, 'கோ பேக் மோடி' ஹேஷ்டேக் நெட்டிசன்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. குறிப்பாக, மோடி வருவதற்கு ஒரு நாள் முன்பு, நடிகை ஓவியா 'கோ பேக் மோடி' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஓவியாவா இது?
முதலில் இது ஓவியாவின் போலியான அக்கவுண்ட் என்று சிலர் கடந்து செல்ல, அவரது வெரிஃபைட் ஹேண்டிலில் இருந்து ட்வீட் செய்யப்பட்டிருந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக நெட்டிசன்கள் இதுபோன்று ஹேஷ்டேக் பதிவிடுவது வாடிக்கை. ஆனால், ஒரு நடிகை இவ்வளவு ஓப்பனாக 'கோ பேக் மோடி' என ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர் பிரிவு
இந்நிலையில், ஓவியாவின் இந்த ட்வீட் குறித்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் சிபிஐசிஐடி அலுவலகத்தின் சைபர் செல்லுக்கு ஒரு புகாரை அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் வருகையை குறிப்பிட்டு, பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதத்தில் நடிகை ஓவியா 'கோ பேக் மோடி' என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை
மேலும், ஓவியா மீது 124 (எ) (தேசதுரோக வழக்கு), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்), 294 (அவதூறு) 69 (எ) ஐடி பிரிவு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications