அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்.. என்ன காரணம்?
சென்னை: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் துணை நடிகை சாந்தினி புகார் கொடுத்து இருந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்தனர்
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் மணிகண்டன் தலைமறைவானார். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் ஜூன் 20-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

341 பக்க குற்றபத்திரிகை தாக்கல்
இதற்கிடையே காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை 9-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மணிகண்டனுக்கு எதிராக 341 பக்க குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. அதுதொடர்பான வழக்கு நீதிபதி மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தது.

சம்மன் அனுப்பியது
அப்போது வழக்கு விசாரணைக்கு ஜனவரி 4-ம் தேதி ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப நீபதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications