காசு எங்கயா? கோடிகளை சுருட்டி கப்சிப் ஆன ‘தலைகள்’! கணக்கு கேட்கும் மேலிடம்..பரபர பாஜக..கலகல கமலாலயம்
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன்னதாக பாஜக தலைமை கொடுத்த பணம் பூத் வரை செல்லவில்லை எனவும், சில வேட்பாளர்களே பணத்தை செலவு செய்யாமல் சுருட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கையை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மையம் கொண்டிருந்த தேர்தல் புயல் வாக்குப்பதிவுக்கு பிறகு ஓய்ந்திருக்கிறது. 19ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை.

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆளுங்கட்சி தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை ஆர்ப்பாட்டம் போராட்டம் மாநாடு என எந்த விதமான அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன
தேர்தல் நிறைவு: அதே நேரத்தில் தேர்தலின் போது தலைவர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக இயங்கினர். கூட்டணி பேச்சு வார்த்தை, கூட்டணி இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தொடர்ந்து பம்பரமாக சுழன்று பணியாற்றி வந்தனர், ஒரு வழியாக தேர்தலும் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது தேர்தலின் போது ஏற்பட்ட பின்னடைவுகள், பிரச்சனைகள், சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து கட்சி தலைமைகள் ஆராய்ந்து வருகின்றன.
பாஜக தலைமை: அந்த வகையில் தேசிய கட்சியான பாஜகவிலும் பெரும் பரபரப்பு பற்றி கொண்டிருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்த அரசியல் நிபுணர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்தது அதில் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் இணைந்தனர். அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. பெரும்பாலும் நட்சத்திர வேட்பாளர்களே பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
பணம் மாயம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதேபோல நயினார் நாகேந்திரன், வினோத் செல்வம், அஸ்வத்தமன் உள்ளிட்ட பலரும் களமிறங்கினர். இந்த நிலையில் தான் தற்போது பாஜகவில் நிறைய தொகுதிகளில் செலவுக்கு என பாஜக தலைமை கொடுத்த பணத்தை சுருட்டி கொண்டதாக பரபரப்பு எழுந்திருக்கிறது. தமிழக பாஜக போட்டியிட்ட பகுதிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் தென் சென்னை, மத்திய சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை ஆகிய தொகுதிகள் ஏ பிரிவில் இடம்பெற்று இருந்தன.
வேட்பாளர்களே சுருட்டல்: அதாவது வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இந்த தொகுதிகள் கருதப்பட்டதையடுத்து பாஜக தலைமை நிறைய பணத்தை செலவுக்காக கொடுத்துள்ளது. பெரும்பாலும் வேட்பாளர் கையில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் பூத் ஏஜென்ட் வரை நன்கு செலவு செய்து வாக்குகளை பெற வேண்டும் என தலைமை உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தலைமை கொடுத்த பணத்தை கீழ் மட்டம் வரை கொடுக்கவில்லை என புகார் அளித்திருக்கிறது. மேலும் வேட்பாளர்களே பணத்தை செலவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. சில இடங்களில் தொகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பணத்தை செலவு செய்யாமல் சுருட்டி கொண்டதாக கூறப்படுகிறது.
தலைமை அதிருப்தி: இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததும் இந்த தகவல் பாஜக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மையக் குழு கூட்டம் கூட்டி வரவு செலவு கணக்குகளை தயாரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. தென் சென்னையில் தற்போது கூட்டம் முடிந்திருக்கும் நிலையில் மத்திய சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்ட இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளும் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட சில தொகுதிகளில் பாஜக மாவட்ட தலைவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனவும், கட்சியின் நிதியை சுருட்டிக் கொண்டதாகக் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications