தொகுப்பு ஊதியத்தில் கணினி உதவியாளர்கள்.. உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் கோரிக்கை
சென்னை: ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 10 ஆண்டிற்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் நிலையில் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுதிப்பூதியத்தில் கணினி உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இன்னும் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசின் மெத்தனப் போக்கு கண்டனத்திற்குரியது.
குழந்தைகளை தாக்கும் புது வைரஸ்கள்.. காய்ச்சல்ன்னா அலட்சியம் வேண்டாம்! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
2007-இல் பணியமர்த்தப்பட்டவர்கள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய, 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி உதவியாளர்கள் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டனர். பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் அனைவரும், 15 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னரும் இன்றுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.
பச்சை துரோகம்
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நிரந்தரம் வேண்டி கணினி உதவியாளர்கள் முன்னெடுத்த பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 22.03.2017 அன்று அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை அப்போதைய அதிமுக அரசு வெளியிட்டது. ஆனால், இறுதிவரை பணி நிரந்தரம் செய்யாமல் அவர்களை அதிமுக அரசு வஞ்சித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசை போலவே பணி நிரந்தரம் செய்யாமல் அவர்களை ஏமாற்றி வருவது கணினி உதவியாளர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகம் ஆகும்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
பணி நிரந்தர அரசாணை வெளியிட்டு 6 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கணினி உதவியாளர்கள் வீதியில் இறங்கி பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அரசாணை 37 இன் படி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் பணிபுரியும் 906 கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் துணை நிற்கும்
அத்துடன், அவர்களுக்கு ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு உட்பட, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை அடிப்படை உரிமைகளையும் வழங்கிட வேண்டும். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கணினி உதவியாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் முன்னெடுக்கும் தொடர்விடுப்பு அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்போம் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.