புதுமைப் பெண் திட்டம்.. தமிழகம் வரும் அரவிந்த் கெஜ்ரிவால்.. உர்ரென பார்க்கும் காங்கிரஸ்
சென்னை: தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் 2022- 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் படி இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்ற பெயர்சூட்டி உள்ள தமிழக அரசு, செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்துள்ளது. சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார்.
உள்ளதும் போச்சு.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் 20 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்
அரவிந்த் கெஜ்ரிவால் வருகை
முதல்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி யாத்திரை
செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடங்கி உள்ள நிலையில், செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாநில அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை கண்டு பாராட்டி இருந்தார். இதனால் தமிழக அரசின் கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் அழைக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது அணியா?
இதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே டிஆர்எஸ், ஆம் ஆத்மி ஆகியோர் பாஜக, காங்கிரஸ் இல்லாத அணியை தேசிய அளவில் உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். அண்மையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்திருந்தார்.
காங்கிரஸ் அதிருப்தி
இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் மூத்த தலைவர்கள் விலகல், கட்சியினர் அதிருப்தி என பிரச்னைகள் எழுவதால், மீண்டும் அக்கட்சி எழுச்சி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன. இதனால் ஆம் ஆத்மியுடன் இணைந்து திமுக மூன்றாவது அணிக்கு திட்டமிடுகிறதா என்ற அதிருப்தியில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
முக்கிய நடவடிக்கை?
அதேபோல், அண்மைக் காலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், ஸ்டாலின் நெருக்கம் காட்டி வருவதால், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மியை இணைக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முதல்முதலாக அறிவித்தார். இதனால் இம்முறை மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை திமுக செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.